இன்று ‘கெடு’ முடிந்தது: காரில் சீட்பெல்ட் அணியாதவர்களை எச்சரித்து அனுப்பிய போலீசார்
சென்னையில் காரின் முன் இருக்கையில் அமர்ந்து செல்பவர்கள் இன்று (9–ந்தேதி) முதல் கட்டாயம் ‘சீட் பெல்ட்’ அணிந்திருக்க வேண்டும் என்று போக்குவரத்து போலீசார் உத்தரவு பிறப்பித்து இருந்தனர்.
சீட் பெல்ட் அணியாமல் இருப்பவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும் எனவும், அதே நபர் 2–வது முறை பிடிபட்டால் ரூ,300 அபராதம் வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதுதொடர்பாக கடந்த 3 வாரங்களாக போலீசார் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இன்று காலை மெரீனா கடற்கரை, அண்ணாநகர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது ஏராளமான வாகனங்களில் முன் இருக்கையில் அமர்ந்து இருந்தவர்கள் சீட் பெல்ட் அணியாமல் இருந்தது தெரிந்தது.
அந்த வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி சீட் பெல்ட் அணிவது குறித்து அவர்களிடம் அறிவுரை கூறினர். மேலும் இதனால் விதிக்கப்படும் அபராதம் குறித்து எச்சரித்தனர். பல டிரைவர்களுக்கு போக்குவரத்து போலீசாரே சீட் பெல்டுகளை மாட்டி விட்டனர்.
இன்று முதல் நாள் என்பதால் வாகனங்களில் சீட் பெல்ட் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்படவில்லை. எச்சரிக்கை மட்டும் விடுக்கப்பட்டது.
